‘உக்ரைன் உடனான போரை 12 நாளில் நிறுத்தாவிட்டால்…’ – ரஷ்ய அதிபர் புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புதினுக்கு கெடு விதித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ட்ரம்ப் புதினுக்கு 50 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார்; தற்போது அதை குறைத்துள்ளார்.
ஒரே இரவில் 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 4+ ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே ட்ரம்பின் போர் நிறுத்த முயற்சிக்கு பலன் கிடைக்காத சூழலில் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
ட்ரம்ப் கூறியது:
“இனியும் காத்திருப்பதில் எந்தப் பலனும் இல்லை. போர் நிறுத்தம் சார்ந்த முன்னேற்றம் எதுவும் நடைபெறவில்லை. புதினால் முடிவெடுக்கப்பட வேண்டும். மக்கள் அதிகளவில் உயிரிழக்கின்றனர். புதினின் செயல்பாட்டின் மீது எனக்கு அதிருப்தி உள்ளது. அவருடன் பேச்சுவார்த்தை நடத்த எனக்கு ஆர்வம் இல்லை.
ரஷ்ய மக்களை நான் நேசிக்கிறேன். அதனால் கூடுதல் வரி விதிப்பது குறித்து யோசிக்கிறேன். அதை ரஷ்யாவோடு செய்ய விருப்பமில்லை. எனவே அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் போரை நிறுத்த வேண்டும். அது நடக்காவிட்டால் தீவிர வரி விதிப்பை தவிர வேறு வழியில்லை.”
மேலும், ரஷ்யா ஏற்றுமதி செய்யும் பொருட்களை வாங்கும் நாடுகளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் உலகளவில் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 14-ம் தேதி, அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்துக்கு புதின் ஒப்புக்கொடுக்காவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.