பாஜகவிற்கு எதிராக குரல் கொடுக்கத் துவங்கிய ஓபிஎஸ்… விஜய்யுடன் ‘பெரும்’ கூட்டணிக்கு முயற்சி?

பாஜகவிற்கு எதிராக குரல் கொடுக்கத் துவங்கிய ஓபிஎஸ்… விஜய்யுடன் ‘பெரும்’ கூட்டணிக்கு முயற்சி?

பாஜக தலைமை தொடர்ந்து புறக்கணிப்பில் ஈடுபட்டதால், வெகுளி நிலையில் உள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதன் வெளிப்பாடாக, தனது அரசியல் பயணத்தில் முதன்முறையாக பாஜக எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பாஜக எதிர்ப்பில் முழுமையாக இறங்கியுள்ளாரா ஓபிஎஸ்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அவர் மீது பற்றுதலுடன் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதன் பின் முழுமையாக மோடியை நம்பி அரசியல் நடத்தியவர். தர்மயுத்தம் தொடங்கியது, சசிகலாவின் அரசியல் ஓட்டத்தை முடித்தது, தினகரனுக்கு எதிராக திட்டமிட்டது, எடப்பாடியுடன் இணைந்தது, பின்னர் அவரை விட்டுப் பிரிந்தது, மீண்டும் சசிகலா – தினகரனுடன் இணைந்தது என கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆதரவுடன் பல மாற்றங்களைப் பார்த்தவர் ஓபிஎஸ்.

அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றபோதும் கூட, ஓபிஎஸ்சுக்கு பாஜக எந்த ஆதரவும் அளிக்கவில்லை. பாஜகவின் பேச்சையே வழிகாட்டியாக ஏற்றிருந்த ஓபிஎஸ்சை, பாஜக எடப்பாடிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தது என அரசியல் மதிப்பீட்டாளர்கள் கூறுகின்றனர்.

எவ்வளவு அடிகள் பட்டாலும் ‘மாணிக்கம்’ போல சிரித்தபடியே பாஜக பக்கம் இருந்த ஓபிஎஸ், தற்போது வழியின்றி ‘பாட்ஷா’வாக மாறியிருக்கிறார். ஆனால், படம் ஓடுமா என்பதற்கான பதில் இன்னும் குழப்பமாய் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இணைந்ததுவரை ஓபிஎஸ்க்கு நிலைமை ஓரளவு சீராக இருந்தது. ஆனால் அதன் பின்னர் பாஜக தலைமை அவரை ஒதுக்க ஆரம்பித்தது. இரண்டு முறை தமிழகம் வந்த அமித் ஷா, ஓபிஎஸ்சை சந்திக்க மறுத்தார்.

அதேபோல், ‘உங்களை சந்திப்பது பாக்கியம்’ என எழுதிய கடிதத்துக்குப் பதிலாக, பிரதமர் மோடிக்கும் அவரை சந்திக்க விருப்பமில்லை. இந்நிலையில், வேறு விருப்பமில்லை என்பதை உணர்ந்த ஓபிஎஸ், புதிய வழியைத் தேடி முன்னேறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாகவே, தமிழகத்திற்கு 2024-25ஆம் ஆண்டுக்கான சமக்ரா சிக்‌ஷா நிதியான ரூ.2,151 கோடியை வழங்காத மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது, பாஜகவிற்கு நேரடியாக எதிராக அவர் உரையாற்ற துவங்கியிருப்பதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இதனையடுத்து, தவெக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவதைத் தூண்டுவதுபோல, பாமகவை கூட்டணியில் இணைக்க வேண்டும் என பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து வெளியிட்டார். தற்போதைய சூழலில், ஓபிஎஸும் அதே பாதையில் பயணிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் தொடக்க மாநாட்டிலேயே, கூட்டணிக்கும், கூட்டணி ஆட்சிக்கும் தயார் என அறிவித்திருந்தாலும், இதுவரை எந்தக் கட்சியும் தவெக பக்கம் வரவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் அறிமுகம் பெற்ற ஓபிஎஸைப் போன்று ஒருவரை கூட்டணிக்கு வர அழைப்பது, விஜய்க்கு சாத்தியமே.

மேலும், விஜய்க்கு வட மற்றும் தென் மாவட்டங்களில் வலுவான ஆதரவு உள்ளதுபோல், ஓபிஎஸுக்கும் தென் மாவட்டங்களில் ஒரு நிலையான செல்வாக்கு உள்ளது. எனவே, இவர்கள் இணைந்தால் நல்ல தேர்தல் பலனை எதிர்பார்க்கலாம் என இரு தரப்பும் கருதலாம்.

மேலும், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை ஓபிஎஸ் விஜய்க்கு பக்கம் கொண்டுவந்தால், தென் மாவட்டங்களில் கூட்டணிக்கு மேலும் வலு கிடைக்கும்.

தவெக + ஓபிஎஸ் கூட்டணி உருவானால், பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் அதில் இணைய வாய்ப்பு அதிகம். இதுபோன்ற கூட்டணி உருவானால், அது பாஜக + அதிமுக கூட்டணிக்கு பெரும் சவாலாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

தவெகவுடன் இணைவது உறுதியானால், ஓபிஎஸ் புதிய கட்சியை தொடங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கலாம். புதிய கட்சியைத் தொடங்குவது, அதனை மக்களிடம் பரப்புவது என்பது பெரிய சவாலாகவே இருக்கும். புதிய கட்சியில் ஈடுபாடுக்கொள்வதால், அதிமுக மீதான சட்ட நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்படலாம். இதற்கும் மேலாக, பாஜக வேறு வழிகளிலும் அழுத்தம் ஏற்படுத்தலாம்.

இதுவரை பாஜக விசுவாசியாக இருந்த ஓபிஎஸ், பாஜகவை ‘பாசிசம்’ எனக் கூறும் விஜய்யுடன் இணைவது நடைமுறையில் சாத்தியமா? ஒருவேளை இச்சேர்க்கை நடந்தால், ஓபிஎஸ் பாஜகவுக்கு எதிராக விமர்சனங்களுக்கு முன்வருவாரா? ஓபிஎஸின் இந்த புதிய கோபமும், மாற்றமும் தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காத்திருக்க வேண்டியதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *