தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது: “தென்னிந்திய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி உள்ளது. இதனால் நாளை (ஆக.16) தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் வலுவான தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசும். ஆகஸ்ட் 17 முதல் 21 வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக் காற்று 45 முதல் 55 கி.மீ., இடையிடையே 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, கோவை மாவட்டம் சோலையார், வால்பாறை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, காக்காச்சி, கோவை மாவட்டம் உபாசி, சின்கோனா, கன்யாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.