மதுரை ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை மனு – பதிலளிக்க உயர் நீதிமன்ற உத்தரவு
சென்னை சைபர் காவல்துறை தாக்கல் செய்துள்ள மனுவில், விசாரணையில் ஒத்துழைப்பு வழங்காததால் மதுரை ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆதீனம் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சமீபத்திய மாநாட்டில் பங்கேற்கும் போது காரில் பயணித்த மதுரை ஆதீனத்தின் வாகனம், உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்கு பின்னர், மாநாட்டில் பேசும்போது, தன்னை கொலை செய்ய சதி நடந்ததாகவும், அந்த சதிக்குப் பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் ஆதீனம் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சென்னைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீஸார் மதுரை ஆதீனம் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியிருந்தது.
தற்போது, போலீஸாரின் விசாரணைக்கு ஆதீனம் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறி, முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென சென்னை போலீசாரால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் விசாரணை இன்று நீதிபதி எம். நிர்மல்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
அதில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், “மதுரை ஆதீனம் தொடர்ந்து விசாரணையில் கலந்துகொள்வதை தவிர்க்கிறார். ஆகவே, அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்ய வேண்டும்,” எனக் கோரினார்.
இதனை தொடர்ந்து, நீதிபதி, மதுரை ஆதீனம் தரப்பில் வரும் ஜூலை 30-க்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து, வழக்கை அத்தினைக்குத் தள்ளி வைத்தார்.