சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: ரூ.25 லட்சம் பரிசுடன் பட்டம் வென்றார் வின்சென்ட் கீமர் – AthibAn Tv

0

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: ரூ.25 லட்சம் பரிசுடன் பட்டம் வென்றார் வின்சென்ட் கீமர்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. போட்டியின் 9-வது நாளான நேற்று 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 8-வது சுற்றின் முடிவில் 6 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்திருந்தார் ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமர். அவர் கடைசி சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ரே ராப்சனுடன் மோதினார்.

கருப்பு காய்களுடன் விளையாடிய வின்சென்ட் கீமர் 41-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனால், தோல்வி இல்லாமல் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். லைவ்ரேட்டிங்கில் 2750.9 புள்ளிகளுடன் 10-வது இடத்தை தக்கவைத்தார்.

இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் அர்ஜுன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி ஆகியோரின் ஆட்டம் 49-வது நகர்த்தலில் டிரா ஆனது. அமெரிக்காவின் அவாண்டர் லியாங், இந்தியாவின் விதித் குஜராத்தி மோதிய ஆட்டம் 31-வது நகர்த்தலில் டிராவாக முடிந்தது. நெதர்லாந்தின் அனிஷ் கிரி, சகநாட்டைச் சேர்ந்த ஜோர்டன் வான் பாரஸ்டை 33-வது நகர்த்தலில் தோற்கடித்தார். இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால்சர், சகநாட்டைச் சேர்ந்த வி.பிரணவை 55-வது நகர்த்தலில் வீழ்த்தினார்.

கடைசி சுற்றில் வின்சென்ட் கீமர் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். நெதர்லாந்தின் அனிஷ் கிரி 5 புள்ளிகளுடன் 2-வது இடம், அர்ஜுன் எரிகைசி 5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்தனர். கார்த்திகேயன் முரளி (5), நிஹால் சரின் (4.5), அவாண்டர் லியாங் (4.5), விதித் குஜராத்தி (4), ஜோர்டன் வான் பாரஸ்ட் (4), வி.பிரணவ் (3), ரே ராப்சன் (3) முறையே 4 முதல் 10 இடங்களை பிடித்தனர்.

குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2025 தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வின்சென்ட் கீமருக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 24 ஃபிடே சர்க்யூட் புள்ளிகளும் அவருக்கு கிடைத்தன. இந்த புள்ளிகள் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற முக்கியமானவை. அனிஷ் கிரி, அர்ஜுன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி ஒரே புள்ளி (6) பெற்றதால் அவர்களுக்கு தலா ரூ.10.83 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்திய வீரர்கள் முழுமையாக கலந்து கொண்டனர். 9-வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான எம்.பிரனேஷ் சர்வதேச மாஸ்டரான ஜி.பி.ஹர்ஷ்வர்தனுடன் மோதினார். 6.5 புள்ளிகளுடன் களமிறங்கிய பிரனேஷ் 47-வது நகர்த்தலில் தோல்வி அடைந்தார். இதனால் அபிமன்யு புராணிக், லியோன் லூக் மெடன்டோன்கா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர்கள் பயன்படுத்தவில்லை.

6 புள்ளிகளுடன் இருந்த லியோன் லூக் மெடன்டோன்கா கடைசி சுற்றில் அதிபன் பாஸ்கரனுடன் பலப்பரீட்சை நடத்தினார். வெள்ளை காய்களுடன் பாஸ்கரன், கருப்பு காய்களுடன் லியோன் லூக் விளையாடினார்கள். 44-வது நகர்த்தலில் பாஸ்கரன் வெற்றி பெற்றதால் மெடன்டோன்கா வாய்ப்பு இழந்தார்.

அதே நேரத்தில் 6 புள்ளிகளுடன் இருந்த அபிமன்யு புராணிக் பா.இனியனுடன் மோதினார். வெள்ளை காய்களுடன் இனியன், கருப்பு காய்களுடன் புராணிக் விளையாடினர். 97-வது நகர்த்தலில் இனியன் வெற்றி பெற்றார்.

புராணிக், மெடன்டோன்கா தோல்வி அடைந்ததால் எம்.பிரனேஷ் 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ.7 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரில் நேரடியாக மாஸ்டர்ஸ் பிரிவில் கலந்து கொள்ள தகுதி பெற்றார்.

கடைசி சுற்றில் எம்.பிரனேஷ் 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அதிபன் பாஸ்கரன் 6 புள்ளிகளுடன் 2-வது இடம், அபிமன்யு புராணிக் 6 புள்ளிகளுடன் 3-வது இடம், லியோன் லூக் மெடன்டோன்கா 6 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்தனர்.

பா.இனியன் (5.5), திப்தாயன் கோஷ் (4.5), ஜி.பி.ஹர்ஷ்வர்தன் (4), ஆர்யன் சோப்ரா (4), ஹரிகா துரோணவல்லி (1.5), ஆர்.வைஷாலி (1) முறையே 5 முதல் 10-வது இடங்கள் பிடித்தனர். பாஸ்கரன், புராணிக், மெடன்டோன்கா ஒரே புள்ளி (6) பெற்றதால் தலா ரூ.3.25 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.