சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் எரிகைசி – வின்சென்ட் கீமர் ஆட்டம் டிராவில் முடிவு
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் ஆறாவது நாளான நேற்று, ஆறாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவின் முரளி கார்த்திகேயன், அமெரிக்காவின் ரே ராப்சனை எதிர்கொண்ட ஆட்டம் 123வது நகர்வில் டிராவாக முடிவடைந்தது.
இந்தியாவின் நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்டுடன் ஆடியதில், ஜோர்டன் வான் பாரஸ்ட் 51வது நகர்வில் வெற்றி பெற்றார். இந்திய கிராண்ட்மாஸ்டரான வி. பிரணவ், அமெரிக்காவின் அவோண்டர் லியாங்கை எதிர்கொண்டார். இதில், அவோண்டர் லியாங் 61வது நகர்வில் வென்றார்.
ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், உலக தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்ட ஆட்டம், 41வது நகர்வில் டிராவாக முடிந்தது. நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் விதித் குஜராத்தியை எதிர்கொண்ட போட்டி 109வது நகர்வில் டிராவாக நிறைவுற்றது.
சேலஞ்சர்ஸ் பிரிவு ஆறாவது சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டரான பா. இனியன், சர்வதேச மாஸ்டரான ஜி. பி. ஹர்ஷ்வர்தனுடன் ஆடிய ஆட்டம் 111வது நகர்வில் டிராவாக முடிவடைந்தது.
அதிபன் பாஸ்கரன், திப்தாயன் கோஷை எதிர்கொண்ட ஆட்டத்தில், 34வது நகர்வில் வெற்றி பெற்று, போட்டியில் தனது முதல் வெற்றியை பெற்றார். இதற்கு முன், முதல் ஐந்து சுற்றுகளையும் டிராவில் முடித்திருந்த அவர், இந்த வெற்றியால் முழுமையான ஒரு புள்ளியை பெற்றார்.
லியோன் லூக் மென்டோன்கா, ஆர்யன் சோப்ராவை 37வது நகர்வில் வீழ்த்தினார். அபிமன்யு புராணிக், எம். பிரனேஷை எதிர்கொண்ட ஆட்டத்தில், எம். பிரனேஷ் 46வது நகர்வில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில், ஆர். வைஷாலி, ஹரிகா துரோணவல்லியை எதிர்கொண்டார். இதில், ஹரிகா 80வது நகர்வில் வென்றார்.
ஆறு சுற்றுகள் முடிவில், மாஸ்டர்ஸ் பிரிவில் வின்சென்ட் கீமர் 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அர்ஜுன் எரிகைசி (3.5), அவோண்டர் லியாங் (3.5), அனிஷ் கிரி (3), முரளி கார்த்திகேயன் (3), விதித் குஜராத்தி (3), ஜோர்டன் வான் பாரஸ்ட் (3), ரே ராப்சன் (2), நிஹால் சரின் (2), வி. பிரணவ் (2) ஆகியோர் முறையே 2 முதல் 10வது இடங்களில் உள்ளனர்.