முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்: அப்போலோவில் இருந்து வீட்டிற்கு திரும்பினார்!

முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்: அப்போலோவில் இருந்து வீட்டிற்கு திரும்பினார்!

சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிற முதல்வர் மு.க. ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை மாலையில் வீட்டிற்குத் திரும்பினார். மேலும் மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் இயல்பான வேலைகளைத் தொடக்கலாம் என அப்போலோ மருத்துவமனைத் தகவல் தெரிவித்துள்ளது.

அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு: “அப்போலோ மருத்துவமனை (கிரீம்ஸ் சாலை) மருத்துவ நிபுணர் குழுவின் தலைவர் டாக்டர் செங்குட்டுவேலு வழிகாட்டிய மருத்துவச் சிகிச்சையை முடித்த முதல்வர், முழுமையாக உடல்நலம் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். மேலும் மூன்று நாட்கள் ஓய்வுக்குப் பிறகு, அவர் வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஏழு நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்துள்ளார். மருத்துவமனையிலிருந்து காரில் புறப்பட்ட அவர், வழி முழுவதும் திமுக தொண்டர்களால் உற்சாக வரவேற்பைப் பெற்றார்.

முதல்வர் வீட்டிற்கு வந்ததையடுத்து, நீர்வளத் துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் மேயர் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 21ம் தேதி காலை நடைப்பயிற்சி செய்யும் போது சிறிது மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அவருக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பரிசோதனைக் காரணமாக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கும் அவர் சென்றுவந்தார்.

சில தினங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதால், மருத்துவமனையிலிருந்தபடியே அவர் அரசு அலுவல்களை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில் கூடுதல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

“முதல்வருக்கு ஏற்பட்ட மயக்கத்திற்கு காரணம், இதய துடிப்பில் ஏற்பட்ட சீர்கேடாகும் என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலுவின் தலைமையில் சிகிச்சை குழுவின் பரிந்துரைப்படி, ஜூலை 24ம் தேதி காலை இதயத் துடிப்பை சீராக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட ஆஞ்சியோ பரிசோதனையில் வேறு எந்தப் பிரச்சனைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது” என மருத்துவமனை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் அரசுப் பணிகளும், கட்சிச் செயல்களும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *