ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்கா பயணம் செய்ய உள்ளார் பிரதமர் – AthibAn Tv

0

ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்கா பயணம் செய்ய உள்ளார் பிரதமர்

ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்ததால், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார்.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையின் 80வது அமர்வு செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. பொது விவாத அமர்வுகள் செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறவுள்ளன. இதில் இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பேசவுள்ளனர்.

இந்த நிகழ்வில் உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இதில் உரையாற்றுகிறார். இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அமெரிக்கா செல்வது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரம்ப்–புதின் சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின், நாளை அலாஸ்கா நகரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பில் ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், “ரஷ்ய அதிபர் புதினுடன் என்னுடைய சந்திப்பு அலாஸ்காவில் 15ஆம் தேதி நடைபெறும். இதுகுறித்து அனைவரும் கவனம் செலுத்தியதற்கு நன்றி,” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.