ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டையால் மட்டும் ஒருவரை இந்திய குடிமகனாக கருத முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்
ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் இந்திய குடிமகனாக ஆகிவிட முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பாபு அப்துல் ரூஃப் சர்தார் எனும் ஒருவர் இந்தியாவில் சட்டவிரோதமாக உள்ளார்; இவர் வங்கதேச நாட்டவராகவும், ஆதார், பான், வாக்காளர் அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் போலியாக வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக போலி ஆவணங்களுடன் இந்தியாவில் தங்கியிருப்பதுமாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சர்தாருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. நீதிமன்றம் தெரிவித்ததாவது:
“1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் இந்தியாவில் குடியுரிமை சார்ந்த கேள்விகளுக்கான முக்கிய சட்டமாகும். யார் இந்திய குடிமகனாக இருக்க முடியும், எப்படி குடியுரிமை பெற முடியும், எந்த சூழ்நிலைகளில் குடியுரிமையை இழக்கலாம் என்பதனை இது வரையறுக்கிறது.
ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் ஒருவரை இந்திய குடிமகனாக்காது; இவை அடையாளம் காணவோ சேவைகள் பெறவோ பயன்படும் ஆவணங்களாக மட்டுமே இருக்கின்றன. குடியுரிமைதாரர்களுக்கும் சட்டவிரோத குடியேறிகளுக்கும் இடையேயான வெவ்வேறு நிலையை இந்த சட்டம் தெளிவாக வரையறுக்கிறது. இது நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் முக்கிய அம்சமாகும். இதன் மூலம் இந்திய குடிமகன்களுக்கு உரிமைகள் பறிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன.”
மேலும், நீதிமன்றம் கூறியது: “சர்தாரின் ஆவணங்கள் குறித்து இன்னும் சரிபார்ப்பு மற்றும் விசாரணை நடைபெற்று வருகின்றது. ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் தலைமறைவாகக் கூடும் என்ற காவல் துறையின் அச்சம் உண்மையானது.”
சர்தார் தனது ஜாமீன் மனுவில், “நான் இந்திய குடிமகன்; வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க நம்பகமான ஆதாரங்கள் இல்லை” என்றும் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.