பெங்களூரு நகை கடையில் துப்பாக்கி காட்டி கொள்ளை: சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸ் விசாரணை

0

பெங்களூரு நகை கடையில் துப்பாக்கி காட்டி கொள்ளை: சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸ் விசாரணை

பெங்களூருவில் உள்ள ஒரு நகை கடையில் முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி, 184 கிராம் தங்க நகைகளை கைப்பற்றி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவின் மாகடி சாலையில் கன்னையா லால் (வயது 46) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த இரவு 9 மணியளவில் கடையை மூடத் தயார் செய்யப்பட்டபோது, முகமுடி அணிந்த மூவர் திடீரென கடைக்குள் புகுந்தனர். துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய அவர்கள், அலமாரியில் இருந்த 184 கிராம் எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடினர்.

சம்பவத்தின் முழு காட்சியும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நகை கடை உரிமையாளர் கன்னையா லால் அளித்த புகாரின் பேரில் மதநாயக்கனஹள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கொள்ளையர்களை அடையாளம் காண சிசிடிவி வீடியோக்களை வைத்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப விசாரணையில், கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உண்மையானதல்லாமல் போலியானதாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.