மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி 6 மாதங்களுக்கு மேலும் நீடிப்பு
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2023 மே 3-ஆம் தேதி தொடங்கிய முரண்பாடுகள் கடுமையான வன்முறையாகப் பரவின. இதில் 250 பேர் உயிரிழந்ததுடன், 60,000-க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
நிலையை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில், மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 13 முதல் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தீர்மானம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து மாநிலங்களவை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356ன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அமலுக்கு வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி, நாடாளுமன்ற ஒப்புதலுடன் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பொதுவாக 6 மாதங்கள் அமலிலிருக்கும். இருப்பினும், நாடாளுமன்ற ஒப்புதலுடன் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.