பாடல் இன்றி உருவான படம் ‘சரண்டர்’

0

பாடல் இன்றி உருவான படம் ‘சரண்டர்’

தர்ஷன், பாடினி குமார், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த் மற்றும் மன்சூரலிகான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சரண்டர்’. இப்படத்திற்கு இசையமைப்பாளராக விகாஸ் படிஸா பணியாற்றியுள்ளார். அப்பீட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஆர்வி குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக மெய்யேந்திரன் பணியாற்றியுள்ளார். இயக்குநர் அறிவழகனின் உதவியாளராக இருந்த கவுதமன் கணபதி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசையும் ட்ரெய்லரும் சென்னையில் வெளியிடப்பட்டன.

இயக்குநர் கவுதமன் கணபதி விழாவில் உரையாற்றும் போது, “இப்படத்தை நிச்சயமாக நேர்மையாக உருவாக்கியுள்ளோம். இதில் பாடல்கள் எதுவும் இல்லை. பாடல்களை தவிர்த்தோம் என்று சொல்ல முடியாது. தேவையில்லை என்பதால்தான் சேர்க்கவில்லை. கதையின் நாயகனாக நடித்த தர்ஷன், இப்படத்தில் எதையும் கேட்காமல் ஆதரித்தார். இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவரும் எனது ஆசான் அறிவழகனிடம் பயின்றவர்கள். ஒருங்கிணைந்த குழுவாக உழைத்தோம். படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது” என்றார்.

நடிகர் தர்ஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, “இயக்குநர் கவுதமன் கணபதி எப்போதும் என்னை ஒரு பெரிய ஹீரோவாகவே நடத்தினார். எப்போதும் எனது பக்கத்திலேயே இருந்தார். மன்சூரலிகான் போன்ற ஒரு அனுபவமிக்க நடிகருடன் பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவரிடம் இருந்து பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.