நாளை முதல் தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அவதி
நாளை முதல் சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி காரணமாக மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கிறது. இதனால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ரயில்களில் முன்பதிவு மற்றும் தட்கல் சீட்டுகள் எளிதில் கிடைக்காததால், மக்கள் அரசுப் பேருந்துகளை நாடுகின்றனர். குறிப்பாக, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கே அதிக கேள்வி உள்ளது.
ஆனால், அரசுப் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் முன்பதிவு முழுமையாக நிறைவடைந்த பின், பயணிகள் ஆம்னி பேருந்துகளை நாடுகின்றனர். இந்நேரங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்கிறது.
எடுத்துக்காட்டாக, சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்ல இருக்கையில் அமர்ந்து பயணிக்க ரூ.1,845 முதல் ரூ.4,218 வரை வசூலிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இருமடங்கு வரை வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், குடும்பத்துடன் பயணம் செல்லும் மக்கள் அதிக செலவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.
பொதுமக்கள், விடுமுறைக் காலங்களில் அரசு விரைவு படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் விளக்கமளித்ததாவது:
“விழா நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். சாதாரண நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட குறைவாகவே வசூலிக்கிறோம். அந்த இழப்பை விழா நாட்களில் ஈடுசெய்வோம். சங்கம் நிர்ணயித்த கட்டணத்தை மீறி வசூலித்தால், அதைப் பற்றி தெரிந்தவுடன் போக்குவரத்து துறைக்கு நாங்களே புகார் அளிப்போம்” என்றனர்.