ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ரூ.4,500 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை தொடங்குகிறார் பிரதமர் மோடி
வரும் ஜூலை 26-ந் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் சிறப்புவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரூ.381 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையம், சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் திறப்பு விழா, ஜூலை 26-ஆம் தேதி இரவு 8 மணிக்கு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள திறந்த மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்து, நாட்டின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
அன்றைய தினம், மாலத்தீவிலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில், இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை அடைய உள்ள பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். அதன்பின், விமான நிலையத்தின் பயணிகள் கூடம் மற்றும் பிற பகுதிகளை பார்வையிடுகிறார். இந்த பயணிகள் கூடம், செட்டிநாடு கட்டிடக் கலை முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பின்னர், விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மற்றும் உரையாற்றுகிறார்.
மேலும், தஞ்சாவூர்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் ஒரு பகுதியாக சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரை ரூ.2,357 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சாலை, ரூ.200 கோடி செலவில் ஆறுவழிசாலையாக மாற்றப்பட்ட தூத்துக்குடி துறைமுகச் சாலை, ரூ.99 கோடியில் மதுரை – போடிநாயக்கனூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதை, ரூ.650 கோடியில் நாகர்கோவில் டவுன் – கன்னியாகுமரி இடையிலான இரட்டை ரயில்பாதை, ரூ.283 கோடியில் ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் சந்திப்பு மற்றும் திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையிலான இரட்டை ரயில்பாதைகள் ஆகிய ரூ.3,970 கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற திட்டங்களையும் திறந்து வைக்கிறார்.
இதேபோல், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகு 3 மற்றும் 4-இல் உருவாகும் மின்சாரத்தை வெளியேற்ற, ரூ.548 கோடி செலவில் மின்பரிமாற்ற அமைப்புக்கான அடிக்கல் நாட்டுகிறார். மொத்தமாக ரூ.4,518 கோடிக்கு மேற்பட்ட திட்டங்களை பிரதமர் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விழாவிற்காக தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் மிகப் பெரிய மேடையும் பந்தலும் அமைக்கப்படுகிறது. வளாகம் முழுவதும் அலங்கரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு காரணமாக விமான நிலையத்திலுள்ள பயணிகள் கூடம் பகுதியை யாருக்கும் அணுக அனுமதிக்கவில்லை. துப்பாக்கியுடன் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் இணைந்து ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தூத்துக்குடி நிகழ்ச்சி முடிந்தவுடன், பிரதமர் தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்படுகிறார்.
பிரதமரை சந்திக்க உள்ளார் பழனிசாமி:
தூத்துக்குடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த அவரது பிரச்சார நிகழ்ச்சிகள் ஜூலை 29-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார் பிரதமர்:
பிரதமர் மோடி, இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு நேற்று பயணமாக புறப்பட்டார். இந்த வெளிநாட்டு பயணத்தின் போது, இந்தியா மற்றும் அந்த நாடுகளுக்கிடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் பிரதமர் மோடி இங்கிலாந்து செல்வதோடு, அங்கு இரு நாட்கள் தங்கி, பிரதமர் கியர் ஸ்டார்மர் மற்றும் மன்னர் சார்லஸைச் சந்திக்கிறார். ஸ்டார்மரின் இல்லத்தில் விருந்து அளிக்கப்பட உள்ளதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, இருநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.
இங்கிலாந்து பயணம் முடிந்தபின், ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாலத்தீவுக்கு செல்ல உள்ளார். அங்கு சுதந்திர தின விழாவில் பங்கேற்று, அதிபர் முகமது முய்சுவை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், இந்திய ஆதரவுடன் செயல்படும் வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.